Wednesday, August 25, 2010

தமிழில் இணையத்தள முகவரி : முதல் தடவையாக இலங்கை சாதனை!

உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது.இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது .

இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் பதிந்து கொள்ள இதன் மூலம் எமக்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இதற்கான அனுமதியை 'அய்கன்" (ICANN) வழங்கியதை அடுத்து இத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று 28 ஆம் திகதி கல்கிசை ஹோட்டலில் இடம்பெற்றது.

'அய்கன்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers நிறுவனம் இணையத்தள முகவரிகளைப் பதிவுசெய்து பாதுகாக்கும் இலாபகரமற்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மரினா டெல் ரே (Marina Del Rey) நகரத்தை தலைமைப் பீடமாக கொண்ட நிறுவனமாகும்.

'இலங்கை" மற்றும் 'லங்கா" முதலான இணையத்தள முகவரியை பெற்றுக் கொள்வதாயின் www.nic.lk என்ற இணையத்தள முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.

இந் நடைமுறையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும் இந் நடைமுறையை தற்போது தேசியளவிலேயே பாவிக்க முடியும் எனவும், இன்னும் சில காலத்திற்கு பிறகு சர்வதேச ரீதியில் பாவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஏற்கனவே இணையத்தள முகவரியைப் பதிந்து கொண்டவர்கள் புதிய முறையினை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட புதிய நடைமுறையால் தமது சொந்த மொழியில் இலகுவாக இணையத்தளத்தை எவரும் பயன்படுத்த முடியும்.

உதாரணமாக வீரகேசரி இணையத்தளத்தை பார்வையிடுவதாயின் http://தளம்.வீரகேசரி.இலங்கை என்று தட்டச்சு செய்யலாம்.

இதன் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்ட தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண எமது வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவிக்கையில்,

"எமது சொந்த மொழியில் இணையத்தள முகவரியை முதன் முதலாக ஆசியாவில் மட்டுமல்ல, முழு உலகிலும் அறிமுகப்படுத்திய பெருமை எமக்கு உண்டு. தாய்மொழியில் இணையத்தள முகவரியை 'இலங்கை' என்று தமிழிலும், 'லங்கா' என்று சிங்களத்திலும், நாம் அறிமுகபப்டுத்தியுள்ளோம்.

அதுவும் முதன் முறையாக தமிழில் இணையத்தள முகவரி உருவாகியுள்ளது இலங்கையில் தான் என்பதும் பெருமைக்குரியதே. இதனூடாக தமிழ் - சிங்கள் மக்களிடையே சமத்துவ நிலைமை உருவாக்கம் பெற்றுள்ளது" என்றார்.

அய்கன் (ICANN) பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவரான ராம் மோகன் கருத்து தெரிவிக்கும் போது,

"ஆசியாவில் தமிழில் தனது நாட்டின் பெயருடன், உலக இணையத்தள முகவரியை முதன் முதலாக அறிமுகப்படுத்திய ஒரே நாடு இலங்கை தான். இது ஒரு மாபெரும் சாதனை. இதனையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

முதன் முறையாக தாய்மொழியில் இணையத்தளத்தினூடாக, மின்னஞ்சலில் பயணிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் அடைந்து கொள்ள இது நமக்கு வாய்ப்பளிக்கின்றது.

இன்று மடி கணினி (லெப்டொப்) யைவிடவும் கையடக்கத் தொலைபேசி மூலமான இணையத்தள பாவனையாளர்கள் அநேகர் உள்ளனர். எனவே எதிர்காலத்தில் 'லங்கா' மற்றும் 'இலங்கை' ஆகிய இணைய முகவரிகள் பிரபல்யம் அடையும் என்பதில் ஐயம் இல்லை" என்றார்.

பாதுகாப்பற்ற மென்பொருள் வரிசையில் அப்பிள் முதலிடம்

கணனி உலகில் அதிக பாதுகப்பு குறைபாடுகள்கொண்ட மென்பொருள்கள் அப்பிள் நிறுவனத்துடையதென கணனி மென்பொருள் பாதுகாப்புச் சேவை நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. இவ்வளவு காலமாக மைக்ரோசொப்ட் நிறுவன மென்பொருள்களே அதிக பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளவையென கருதப்பட்டு வந்ததன.

' செக்கியுனியா ' எனும் மேற்படி நிறுவனமானது டென்மார்க் நாட்டை சேர்ந்த பிரபல கணனி மென் பொருள் பாதுகாப்புச் சேவை வழங்குனராக இயங்கி வருகிறது.

இந் நிறுவனத்தின் அறிக்கையின் படி அப்பிள் நிறுவனத்துடைய மென்பொருள்களே அதிக பாதுகாப்பற்றவையாக காணப்படுவதாகவும் அடுத்ததாக 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களில் முறையே ' ஒராக்கிள்' மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றது.

மேற்படி ஆய்வானது அப்பிளின் ' மெக் ஒஸ் ' இயங்கு தளத்தையும் அப்பிளின் இதர மென்பொருள்களான ' குயிக் டையிம்' , ' ஜ் டியூன் ' , ' சபாரி ' மற்றும் 3ஆம் நபர் மென்பொருள்களான ' பிளாஷ் ', ' ஜாவா ' உட்பட அனைத்தையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகும்.

அதன்படி குறைபாடுகள் அப்பிளின் இயங்குதளமான ' மெக் ஒஸ்' ஐ விட மற்றைய மென்பொருட்களினாலேயே உண்டாக்கப்படுவதாக தெரிவிக்கின்றது.

மேற்படி 3ம் நபர் மென்பொருள்களே அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக அந் நிறுவனம் தெரிவிக்கின்றது.

அதிகபாதுகாப்பு குறைபாடுகள் கொண்ட மென்பொருட்கள்.

1.அப்பிள்

2. ஒராக்கிள்

3.மைக்ரோசொப்ட்

4. எச்பி

5. அடோப் சிஸ்டம்ஸ்

6. ஐபிம்

7. விம்வெயார்

8. ஸிஸ்கோ

9. கூகுள்

10. மொஸிலா

பேஸ்புக் - டுவிட்டர் நிறுவனங்களின் புதிய எதிரி

பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலை பின்னல் தளங்களில் அதிக நேரம் விரயம் செய்யும் ஊழியர்களினால் பிரித்தானிய நிறுவனங்களுக்கு பில்லியனளவில் பணவிரயமேற்படுவதாக ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

பிரித்தானிய இணையத்தளமொன்று நடத்திய வாக்கெடுப்பு ஒன்றின் முடிவின்படி பிரித்தானியாவின் 34 மில்லியன் ஊழியப்படையில் 2 மில்லியன் பேர் 1 மணித்தியாலத்திற்கும் அதிகமான தங்களது வேலை நேரத்தை மேற்படி சமூக வலை பின்ணல் தளங்களில் செலவிடுவதாக அந்த இணையத்தளம் தெரிவிக்கின்றது. இது மொத்த வேலை நேரத்தில் 8 இல் 1 பங்காகும்.

மேற்படி இணையதளத்தளத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் கருத்துப்படி ஐக்கிய இராச்சியத்தில் ஊழியர்கள் மிகவும் அதிக நேரத்தினை சமூக வலை பின்னல் தளங்களில் செலவிடுவதாகவும், இது நிறுவனங்களினால் கவனத்தில் கொள்ளப்படுவதில்லையெனவும் இது ஊழியர்களின் ஆக்கத்திறனில் மறைமுக பாதிப்பை எற்படுத்துவதாகவும் இதனால் நிறுவனங்கள் பல்வேறு நட்டங்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

இத்தகைய செயற்பாட்டினால் நிறுவனங்களுக்கு 14 பில்லியன் பவுண்கள் வரை பணவிரயமேற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவ்வாய்வறிக்கையின்படி பிரித்தானிய ஊழியர்களில் 55% வீதத்திற்கும் அதிகமானவர்கள் தாம் தமது வேலைநேரங்களின் மேற்படி தளங்களினை உபயோகிப்பதாக வெளிப்படையாகth தெரிவிப்பதாகவும் இதில் பலர் மிகவும் அதிக நேரம் செலவிடுவதாகவும் அவ் அறிக்கை தெரிவிக்கின்றது.

இப்புதிய சவாலனது நிறுவனங்களுக்கு பாரிய அடியென தெரிவிக்கப்படுகின்றது

இந்தியாவின் முதலாவது 'டெப்லட்' கணினி

'ஒலிவ் டெலிகொம்' என்பது இந்தியாவில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாகும்.

'ஒலிவ் ஸிப்புக்' எனப்படும் இந்தியாவின் முதலாவது 3ஜி தொழிநுட்பத்துடன் கூடிய ' நெட் புக்' மற்றும் 'ஒலிவ் விஸ்' எனப்படும் இந்தியாவின் முதலாவது 3 'சிம்'களைக் கொண்டு இயங்கக் கூடிய கையடக்கத் தொலைபேசி என்பன இதன் முக்கிய தயாரிப்புக்களாகும்.

இந்நிலையில் அந்நிறுவனம் இந்தியாவின் முதல் 3.5 ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் 'டெப்லட்' ரக கணினியை அண்மையில் அறிமுகம் செய்தது. கையடக்கத் தொலைபேசியாகவும் உபயோகிக்க முடியுமென்பதே அதன் சிறப்பம்சமாகும்.

'ஒலிவ் பேட் விடி 100' என இவ்வுபகரணம் அழைக்கப்படுகிறது. இது 7 அங்குல தொடுந் திரையைக் கொண்டுள்ளது.

'கூகுளி'ன் 'அண்ட்ரோயிட்' இயங்கு தளத்தினைக் கொண்டு இயங்குகின்றமை இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

'ஜிபிஎஸ்', 'புளூடூத்', 'வை-பை', 'டீவி டியூனர்' ஆகிய வசதிகளையும் 3 'மெகாபிக்ஸல்' கெமரா வசதியையும் இந்த உபகரணம் உள்ளடக்கியுள்ளது.

'512 எம்பி' + '512 எம்பி' உள்ளக நினைவாற்றலை இது கொண்டுள்ளதுடன் இதனை '32 ஜிபி' வரை 'மைக்ரோ எஸ்டி' இன் மூலம் அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

இதன் விலை இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் 500 அமெரிக்க டொலர் வரை விலை மதிப்பிடப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது

உலகின் முதலாவது முப்பரிமாண கெமரா - அச்சிடுதல் முறை அறிமுகம்

உலகில் முதலாவது முப்பரிமாண கெமரா மற்றும் அச்சிடுதல் முறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பியூஜி பிலிம்ஸின் புதிய முப்பரிமாண முயற்சியாக இது அமைந்துள்ளது.

இந்தக் கெமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படத்தை உடனடியாக அல்பம் வடிவில் பார்க்க முடியும். இதில் காணப்படும் நவீன தொழில்நுட்பத்துடனான லென்ஸ் மனித கண்களின் பார்வை தூரத்தை விட மேலானது.

இது லெண்டிக்யூலர் தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது. இவ்வகையான தொழில்நுட்பம் 1940 களில் பாவிக்கப்பட்டாலும் பின்னர் நவீனப்படுத்தப்பட்டு தற்பொழுது முப்பரிமாண முறையில் அறிமுகமாகிறது

Monday, August 23, 2010

MICROSOFT நிறுவனத்தின் WINDOWS 8

MICROSOFT நிறுவனத்தின் அடுத்த இயங்குத்தளம் WINDOWS 8 ஜூலை 2012 ல் வருகிறது. இது WINDOWS 7 னை விட வேகமாகவும், பயனாளர்க்கு உதவியாகவும் என்று அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.
விண்டோஸ் பயனாளர்க்கு புதிய வசதிகளை அறிமுகம் ஆகிறது.

விண்டோஸ் 8 128 BIT என்று எதிர்பார்க்கபடுகிறது .

INTEL நிறுவனத்தின் உதவியுடன் USB 3.0 இதில் அறிமுகம் செய்யப்படுகிறது.

USB 2.0 வில் அதிக பச்சமாக 480 MBits/s. USB 3.0 வில் அதிக பச்சமாக 5 Gbits/S .

விண்டோஸ் 7 உள்ள குறைகளை கண்டறிந்து விண்டோஸ் 8 உருவாக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine

கணினிக்கு வருகிற வைரஸ்கள் எல்லாம் பென் டிரைவ் மூலம் அதனுள் உள்ள autorun.inf என்ற கோப்பை மாற்றி அதன் வழியாக பரவி விடுகின்றன. நீங்கள் ஏதேனும் ஆண்டி வைரஸ் போடவில்லை என்றால் அவ்வளவு தான். உட்கார்ந்து விடவேண்டியது தான். எனவே இந்த கோப்பை நீங்கள் முடக்குவதன் மூலம் கணினியை பாதுகாக்கலாம்.
பாண்டா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள மற்ற டிவைஸ்களின் தானியங்கும் செயலையும் முடக்கும். உதாரணமாக சிடி அல்லது டிவிடி டிவைஸ்கள். மேலும் autorun கோப்புகள் எங்கிருந்து செயல்பட்டாலும் முடக்கும்.கணினிக்கும் பாதுகாப்பை பலப்படுத்தும்.

அடுத்து பென் டிரைவ்கள், மெமரி கார்ட்கள் மற்ற Usb கருவிகள் எதை கணினியில் நுழைத்தாலும் அதை முடக்கிவிடும். நீங்கள் கணினியில் இதை முடக்க தேடிக்கொண்டிராமல் இந்த மென்பொருள் மூலம் கணினியை பாதுகாப்பாக வைத்திருங்கள்.

ஸ்மார்ட் போன்கள் மூலம் மொழி தடைகளை உடைக்கலாம்!!!

ஸ்மார்ட் போன்களிலேயே இயங்கும் real-time மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தை உருவாகியிருக்கிறார்கள். இதைப் பற்றி தான் இந்த பதிவு.
தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று அமெரிக்கா ஈராக்கையும், ஆப்கானிஸ்தானையும் பிடித்த பிறகு அந்நாடுகளில் அமெரிக்க படையினருக்கு மொழிப்பிரச்சனை பெரிதாக வளர்ந்தது. சோதனைகளின் போது சைகை மொழியிலேயே பேச வேண்டியிருந்தது. இது மிக பிரச்சனை மிகுந்ததாகவே இருந்தது.

இச்சிக்கலை தீர்ப்பதர்க்க்காகவே TRANSTAC தொழில்நுட்பத்தை உருவாக்கியதாக கூறுகிறது National Institute of Standars and Technology (NIST). TRANSTAC மொழிபெயர்ப்பாளர்களின் தேவையை நீக்குகிறது. ஆங்கிலத்தில் பேசுவதை speech recognition தொழில்நுட்பத்தின் மூலம் புரிந்து கொண்டு txt file ஆக சேமிக்கிறது. பின் இது தேவையான மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பின் ஒலிக்கிறது. பின்னர் மீண்டும் இதுவே அக்குறிப்பிட்ட மொழியில் இதே போல் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்தில் ஒலிக்கும். பேசும் சொற்றொடரின் நீளத்திற்கு ஏற்ப மொழிப்பெயர்ப்பு வேகம் 2 அல்லது 3 வினாடிகள் வரை எடுத்து கொள்கிறது.

இதற்கு தனிக்கருவி எதுவும் இல்லாமல் ஸ்மார்ட் போன்களிலேயே பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பு.

சந்திரன் சுருங்குவதாக விஞ்ஞானிகள் தகவல் ..!

சந்திரன் படிப்படியாக சுருங்கி வருகிறது. குளிர்ச்சி அடையும் போது அதன் மேற்பரப்பு பல மைல் நீளத்துக்கு சுருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் அளவு சிறிதாகி கொண்டே வருகிறது.
இந்த நிகழ்வு கடந்த 100 கோடி ஆண்டுகளாகவோ, அதற்கு மேலும் ஏற்பட்டிருக்கலாம். இந்த தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுக்கு பிறகு இந்த முடிவு மேற்கொண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அங்குள்ள சிறிய எரிமலைகள், மற்றும் செங்குத்தான குன்றுகள் மற்றும் பாறைகளாலும் இது போன்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சந்திரன் பூமியை விட குறுக்களவில் நான்கில் ஒரு பகுதி அளவுடையது. தற்போது அது சுருங்கி வருவதால் முற்றிலும் அழியும் நிலை ஏற்படாது. எனவே காதலர்களும், கவிஞர்களும் அச்சப்பட தேவையில்லை.

உட்கார்ந்தபடி வேலை பார்க்கிறீர்களா?

பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சனைகள் ஏராளம்.
இவற்றைச் சரிச்செய்து கொள்ள நமக்கு சில எளிய டிப்ஸ்களை தருகிறார் சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மற்றும் நேச்சுரோபதி டாக்டர் ஜீவா சேகர்.

* காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை முடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையை தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.

* நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத ‘குஷன்’ நாற்காலிகளை பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.

* முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

* பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள். கூடவே தண்ணீர் குடிப்பது, முகத்தைச் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது... என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக் கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள் (முதுகு மற்றும் இடுப்பு வலி இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகே இவற்றைச் செய்ய வேண்டும்). இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.

* கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதை தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை முடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். ‘ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்’ -ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.

* உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளை தடுக்கும். அதற்கு பதில் அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளை கட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி... போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும்.

* இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதை தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்.