Saturday, August 14, 2010

கூகுள் மீது வழக்கு தொடர்ந்தது ஆரக்கிள்

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களுக்கான மென்பொருள் உருவாக்கத்தில், காப்புரிமை மீறல் தொடர்பாக பிரபல கூகுள் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது ஆரக்கிள் நிறுவனம்.
கலிபோர்னியா நீதிமன்றத்தில் கடந்த வியாழனன்று தொடரப்பட்ட இந்த வழக்கில், "கூகுள் நிறுவனம் வேண்டுமென்றே, மீண்டும் மீண்டும் ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா அடிப்படையிலான அறிவுசார் சொத்துரிமையை அப்பட்டமாகக் காப்பியடிக்கிறது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்திடமிருந்து 5.6 பில்லியன் டாலர் கொடுத்து ஜாவா மென்பொருள் உரிமையைப் பெற்றது ஆரக்கிள். இணையதளம் சார்ந்த பல வசதிகளுக்கு ஜாவா தொழில்நுட்பம் அவசியம். ஆனால் கூகுள் நிறுவனம் எந்த வித காப்புரிமைத் தொகையும் தராமல் இந்த மொன்பொருள் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாக நீண்ட நாட்களாகக் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளில் இப்போது ஆரக்கிள் இறங்கியுள்ளது.

"டிவிடிகள், செல்போன்கள், கம்ப்யூட்டர்கள் என பல மின்னணு சாதனங்களிலும் இன்றைக்கு ஜாவா பயன்பாடு அவசியமாகிறது. எனவே ஜாவா இன்றைக்கு முக்கிய சொத்தாகத் திகழ்கிறது. அதன் உரிமையை உரிய அனுமதியின்று யாரும் அனுபவிக்க விடமாட்டோம்" என்கிறார் ஆரக்கிள் நிறுவன சிஇஓ லாரி எல்லிசன்.

கூகுளின் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் ஜாவா தொழில்நுட்பம் மிக முக்கியமான ஒன்றாகும். நாளொன்றுக்கு உலகம் முழுக்க 2 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகின்றன.

என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர் ஆதாரம்

விண்வெளி ஆராய்ச்சிக்காக செலுத்தப்பட்ட காசினி விண்கலம், நூற்றுக்கணக்கான படங்களை பூமிக்கு அனுப்புகிறது. சூரிய குடும்பத்தில் உள்ள ‘என்சிலூடஸ் துணை கோளை, காசினி விண்கலம் சுமார் 6,17,000 மைல் தூரத்தில் பயணித்த போது, எடுத்த படத்தை டாக்டர். ப்ராங்க் போஸ்ட்பெர்க்விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
இதில் என்சிலூடசில் உப்புநீர் பனிப்பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அங்கு ஏரிகள், நீர்தேக்கங்கள், மற்றும் கடல்கள் இருந்திருக்க கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த ஆராய்ச்சி மேலும் தொடர்ந்து நடைபெறுகிறது. சூரிய மண்டலத்தில் உள்ள 3 துணை கோள்களில் என்சிலூடசும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதன் தூங்கும் போது சுறுசுறுப்பாக இயங்குமாம் மூளை

தூங்கும் போது உடலும் மனமும் செயலற்று இருக்கும் எனபது தான் பலரின் கருத்து ஆனால் தூங்கும் போது தான் மூளை சுறுசுறுப்பாக இயங்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும் தூங்கும் போது மின் தூண்டுதல் மூளையில் ஏற்படுகின்றதாம்.
அதிக அளவில் மின் தூண்டுதல் ஏற்படுபவர்கள் நீண்ட நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள் எனவும் ஆராய்ச்சியில் நிருபிக்கப்பட்டுள்ளது. இந்த மின் தூண்டுதல்கள் ஸ்பின்ட்ல்ஸ் என கூறப்படுகிறது. இதன் செயல்கள் மூளையில் உள்ள தலாமஸ் என்ற பகுதியில் நடக்கிறதாம்.

தூங்கும் போது கேட்கும் சத்தங்களை வேறு பகுதிகளுக்கு திருப்பி விடும் வேலையை இந்த தலாமஸ் செய்கிறது. அதனால் தான் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது நமக்கு சத்தம் கேட்பதில்லை. தூங்கும் போது மூளையில் அடிப்பாகத்திலிருக்கும் வேறு நரம்பு மண்டலங்கள் இயங்கத் தொடங்குகின்றன.

தூங்கும் போது தான் நியூரான்கள் மிக சுறுசுறுப்பாக இயங்கி ஆரோக்கியத்திற்கு தேவையான கடினமான சில பணிகளை செய்கின்றன என்பதால் நன்றாக தூங்க வேண்டும் என்கிறார் தூக்கம் குறித்த மருத்துவ நிபுணரான Dr எல்லேன்போகேன்.

ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தினசரி 16 மணிநேர தூக்கம் மிக அவசியமாகும். தற்போது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பெரியவர்களுக்கு 7 மணி நேரத் தூக்கம் போதுமானது என கண்டறியப்பட்டுள்ளது. மொத்தத்தில் தூக்கம் வந்தால் தூங்குவதில் எந்த தவறும் இல்லை எனவும் கூறுகின்றனர் மன நல மருத்துவர்கள்.

Monday, August 9, 2010

எலிகளை விழுங்கும் தாவரம் கண்டுபிடிப்பு!

மனிதர்கள் மீது அப்படியே படர்ந்து கசக்கி கொன்று விடும் செடி, கொடிகளைப் பற்றி கதைகளில் படித்திருப் பீர்கள். ஆனால், உண்மையில் அப்படி ஒரு செடி இருப்பதை, விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.
இந்த செடியின் இலைகள், உயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிப்பதைப் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

செடி, கொடிகள் அடங்கிய தாவரங்கள் சுத்தமான சைவம்தான். அவைகளுக்கு உணவே, சூரிய ஒளி, தண்ணீர், உரங்கள் தான். அதுவும் வேர்கள், இலைகள் மூலம் உணவை கிரகித்துக் கொள்ளும். ஆனால், அசைவ உணவை சாப்பிடும் தாவரம் பற்றிய தகவல் இப்போது தான் வெளியே வந்துள்ளது.

பிரபல தாவர இயல் விஞ்ஞானிகள் ஸ்டூவர்ட் மெக்பெர்சன், அலாஸ்டியர் ராபின்சன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு பிலிப் பைன்ஸ் நாட்டில் விக்டோரியா மலைப்பகுதியில் செடி, கொடிகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போதுதான், இந்த மாமிசம் உண்ணும் தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர். இந்த மலைப்பகுதியில் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மிஷனரிகள் இந்த அபூர்வ தாவரம் பற்றி கேள்விப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலை ஆராய்ச்சி செய்த போதுதான், இந்த தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர்.

இது குறித்து மெக்பெர்சன் கூறியதாவது:

இந்த கண்டுபிடிப்பு மிக, மிக முக்கியமானது. 21ம் நூற்றாண்டு வரை, இப்படி ஒரு தாவரம் இருப்பதை கண்டுபிடிக்காமல் இருந்ததே மிகவும் அதிசயம் தான். இயற்கை உலகின் அதிசயம், அழகைப்பற்றி மக்கள் அறிந்து கொள்ள மிகவும் பாடுபட்டவர் சர்.டேவிட் அட்டன்பரோ. எனவே, அவர் பெயரிலேயே இந்த தாவரத்தை அழைக்க முடிவு செய்துள்ளோம். இனி, இந்த தாவரம், “நேபன்தஸ் அட்டன்பரோகி’ என அழைக்கப்படும். இந்த தாவரம் சிவப்பு, பச்சை நிறத்தில் உள்ளது. இதன் தண்டு, நான்கு அடி உயரம் வரை வளரும். விக்டோரிய மலை சரிவுகளில் பெரும் புதர்களுக்கு மத்தியில் மட்டுமே இந்த செடி வளர்கிறது.

இந்த செடியின் இலைகள் தான், அந்த செடிக்கு வாய் போல் உள்ளது. அதன் மேல் அமரும் எலி போன்றவற்றை அப்படியே பிடித்துக் கொள்கிறது. இலையில் சுரக்கும் ஒருவித வழுவழுப்பான என்சைம்களில் இருந்து எலிகள் தப்ப முடியாது. பின்னர், அந்த என்சைம்களே எலிகளை கொன்று விடுகிறது. எலிகள் மட்டுமல்ல, பூச்சிகள் போன்ற சிறிய உயிரினங்களையும் இந்த தாவரம் கபளீகரம் செய்து விடும். தாவர இயலில் இந்த மாமிசம் உண்ணும் தாவரம் கண்டுபிடிப்பு மிக முக்கியமானது. இவ்வாறு மெக்பெர்சன் கூறினார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைகழக தாவர இயல் முன்னாள் பேராசிரியர் இவர். 2007 முதல் இந்த தாவரம் பற்றி ஆராய்ச்சிகளை மேற் கொண்டுள்ளார். தன் ஆராய்ச்சியில், மாமிச தாவரம் பற்றிய உண்மைகளை முழுமையாக கண்டுபிடித்த பின்னர், சமீபத்தில் இந்த அதிசயத்தை உலகிற்கு அறிவித்தார்.

பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிப்பு

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் காரில் பயணம் செய்பவர்கள் விலையேற்றம் காரணமாக அதில் பயணம் செய்ய அச்சப்படுகின்றனர். இனி அந்த கவலை வேண்டாம்.

பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கார் இயங்க தேவையான எரிபொருளை மண்ணில் உள்ள பேக்டீரியாவில் இருந்து எடுக்கப்படும் என்சைம்களை (வேதிப்பொருளை) கொண்டு காற்றின் மூலம் தயாரிக்க முடியும் என கண்டு பிடித்துள்ளனர். இதற்கு மிகவும் குறைந்த செலவாகும்.

இதன்மூலம் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படாது. கார் என்ஜின்களும் பழுது படாது என்றும் தெரிவித்துள்ளனர்.

“என்சைம்”களில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் “புரோபேன்” மூலக்கூறில் இருந்து 3 கார்பன் அணுக்கள் சங்கிலி தொடர் போன்று உருவாகிறது. இது தொடர்ச்சியாக சங்கிலியாக உருவாகி பெட்ரோல் ஆக மாறுகிறது. இதுவே செயற்கை எரி பொருள் ஆகிறது என கலி போர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்கஸ்ரிப்பே தெரிவித்துள்ளார்.