Friday, September 3, 2010

குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு

“நியோனி’ என்ற புதிய ரோபோ இயந்திரத்தை ஜப்பான் நாட்டில் ஒசாகா பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. “நியோனேட்’ என்ற வார்த்தையில் இருந்து புதிய ரோபோவிற்கு, “நியோனி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. “நியோனேட்’ என்றால் பிறந்த குழந்தை என ஜப்பான் மொழியில் பொருள்.

புதிய ரோபோவிற்கு பிறந்த குழந்தை என பெயர் சூட்டப்பட்டாலும், இந்த ரோபோ நன்கு வளர்ச்சியடைந்த குழந்தை போல் செயல்படும். இந்த ரோபோ, தானே எழுந்து நிற்கும்; எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பும்; தவழும். இந்த புதிய ரோபோவில் இரண்டு வீடியோ கேமராக்கள் உள்ளன. அதன் காது பகுதியில், இரண்டு மைக்ரோ போன்கள் பொருத்தப்பட்டுள்ளன. உடல் பகுதியில் மோட்டார் மற்றும் உணர்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ரோபோ குறித்து இதை உருவாக்கிய குழுவின் இயக்குனர் அசடா மினோரு கூறியதாவது:


மனிதர்களுடன் சேர்ந்து வாழும் திறமை பெற்றுள்ள ரோபோக்களை உருவாக்குவதுதான் எங்கள் லட்சியம். அதற்கு தேவை மனிதர்களைப் பற்றி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய ரோபோக்களை தயாரித்துள்ளோம். இந்த குறிப்பிட்ட ரோபோ திட்டம், குழந்தைகளை மையமாக கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார்.

பிறந்த குழந்தை ரோபோவைத் தவிர, குழந்தைகள் ரோபோக்களும் இந்த ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ரோபோக்கள், மனிதர்களின் பேச்சை புரிந்து கொள்ளும்; பொருட்களை அடையாளம் காணும். பின்னர் அதற்கு ஏற்றார் போல் பதிலளிக்கும். “கின்டி’ என்ற இன்னொரு ரோபோவையும் இந்த பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. ஐந்து வயது குழந்தை போல் தோற்றமளிக்கும் இந்த ரோபோ, முகத்தில் பலவித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். மனித வளர்ச்சியை ஆராய்வதற்காக இந்த வகை ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சி வெற்றி பெற இன்னும் பல ஆண்டுகள் ஆகும். எனினும், மனித இன வளர்ச்சி மர்மத்திற்கு இதுபோன்ற ரோபோக்கள் மூலம் விடை கிடைக்குமா என்பது கேள்விக்குறித்தான்!

No comments:

Post a Comment